காதலுக்காக சாகலாம்...
காதலுக்காகவே
வாழலாம்!!
Tuesday 13 November 2012
Wednesday 31 October 2012
என் சங்கீதத்திற்காக...
என் தேவதைக்கான
பாடல்:
பல்லவி:
அன்பே சங்கீதா
சொர்க்கம் பக்கம் தா!
அழகே சங்கீதா
என்னுயிரில் இன்பம் தா!
உன் கண்ணில்
என்னைக் கொன்று
உன் அழகில் என்னை வென்று
நித்தம் நித்தம்
என்னை ஆளடி!
செல்லக் குரலில்
மெல்லச் சிணுங்கி
சிவந்த இதழில்
கவிதை எழுதி
மடியில் சாய்த்துக் கொள்ளடி!
உன் அன்பால் என்னை வெல்லடி!
சரணம் 1:
மழைநாளில் நீ எனக்கு
தேநீராய் வர வேண்டும்!
மறுநாளில் நீ எனக்கு
தேன்துளியாகும்
வரம் வேண்டும்!
மாமா மாமா
என்றழைத்து
என் இதயம்
தொட வேண்டும்!
வேண்டாமென்று
சொல்லும் போதும்
முத்தமழை பொழிய வேண்டும்!
அன்பே சங்கீதா
என் அழகே சங்கீதா...
என் ஊனும் சங்கீதா..
என் உயிரும் சங்கீதா!
சரணம் 2:
என்னருகில்
நீயில்லா நேரங்களில்
உன் நினைவில்
என் இதயம் துடிக்குமடி!
ஒருநாள் உன்னை
நான் பிரிய நேர்ந்தால்
அப்போதே என் இதயம்
வெடிக்குமடி!
உன் கண்ணழகில்
நான் ஒதுங்கி
உன் புன்னகையில்
உயிர் வாழ்வேன்!
என் நெஞ்செங்கும்
உன்னை விதைத்து
என் கண்ணுக்குள்
உன்னைப் புதைத்து
கண்மூடி தவமிருப்பேன்!
தகப்பனாய்
தோழனாய்
நானிருந்து
உன் ஆசைகளை
தீர்த்து வைப்பேன்!
மழலையாய்
நான் உனக்கு
செல்லக் குறும்புகளை
சேர்த்து வைப்பேன்!
அன்பே சங்கீதா..
அழகே சங்கீதா..
ஊனும் சங்கீதா..
என் உயிரும் சங்கீதா...!
Monday 15 October 2012
ரசனை::
♥ ♥
பற்றவைத்த சிகரெட்
முடிவதற்குள்
முடிந்துவிடுகிறது
புகைத்தலின் மீதான
ரசனை!!
♥ ♥ ♥
Sunday 14 October 2012
மழைவாழ்த்து::
மழைவாழ்த்து
♥ ♥ ♥
நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்த தளிரே
நாளைய மழைக்கு காரணம்!
¤
இன்றும் மறக்காமல்
வந்திருந்த மழையில் நனைய
மறந்தேவிட்டேன்!
¤
மரணித்துப் புதைந்தாலும்
ஜனனம் தர மறப்பதில்லை
நன்றியுள்ள மழை!
¤
மழைநாளில்
மெருகேற்றப்படுகிறது
அனைவரின் கலைந்த காதலும்!
¤
மழைக்கு
நிகர்
மழையே!
¤
அதிகமானோரால்
மிக அதிகமாய்
நேசிக்கப்
படுவதொன்றும்
ஆச்சர்யமில்லை..
மழையென்றாலே
அதிகம்தான்!
¤
தொப்பலாய் நனைய ஆசைதான்..
மழைதான் நின்றுவிட்டது!
¤
நனைபவரைப் பொறுத்தே
மழைக்கு கிடைக்கும்
வாழ்த்தும் வசையும்!
¤
கொஞ்சம் மழை
கொஞ்சம் தேநீர்
நிறைய ஞாபகங்கள்!
¤
மழையை
ஒப்பிடலாம்
மழையோடு மட்டும்!
¤
ஊடலில் தனித்திருப்போரை
அச்சத்தில் அணைக்கவைத்து
காதலில் திளைக்கச்
செய்கிறது
இடியுடன் கூடிய மழை!
¤
நல்லவேளை
குடையெடுத்துச்
செல்லவில்லை..
நல்லமழை!
¤
பருவம் தவறிப்
பொய்த்த மழை
புருவம் உயர்த்துமளவிற்கு
பெய்துவிடுகிறது
ஏதாவதொரு நாளில்!
¤
ஆயிரம் கால்களில்
ஆனந்த தாண்டவம்..
இடியோடு ஒரு பெருமழை!
♥ ♥ ♥ ♥
Saturday 13 October 2012
பலம்::
♥ ♥
வாள்வீசும்
வீரனாயினும்
சிரித்தபடியே
தோற்றாக வேண்டும்
குழந்தையுடன்
நிகழ்த்தும்
விளையாட்டுச் சண்டையில்!!
♥ ♥ ♥
Thursday 11 October 2012
அழகு::
♥ ♥
வாழ்க்கையை அழகாய்
வாழ நினைத்தால்
நீயும் காதலையே
தேர்ந்தெடுத்துக்கொள்!!
♥ ♥ ♥
Wednesday 10 October 2012
சபித்தல்::
♥ ♥
விட்டுவிட்டுப் பெய்யும்
மழை
விடாது சபிக்கப்படுகிறது
வெகு சிலரால்!!
♥ ♥ ♥
Tuesday 9 October 2012
சபித்தல்::
♥ ♥
விட்டுவிட்டுப் பெய்யும்
மழை
விடாது சபிக்கப்படுகிறது
வெகு சிலரால்!!
♥ ♥ ♥
Monday 8 October 2012
முதல்காதல்::
கவிதை
♥ ♥
சந்திக்கும் வரை தவம்
சந்தித்த பின் வரம்...
முதல்காதல்!!
♥ ♥ ♥
Sunday 7 October 2012
கவிதை::
கவிதை
♥ ♥
புரியாத வார்த்தைகளைக்
குதப்பிக் குழறித் துப்பினாலும்
அழகாய்த்தானிருக்கிறது
குழந்தையின்
உளறல்கவிதை!!
♥ ♥ ♥
Thursday 4 October 2012
Tuesday 2 October 2012
கவிதைக்கதை::
கவிதைக்கதை
♥ ♥
ஒவ்வொரு கவிதையும்
ஒவ்வொரு கதை சொல்ல
குழந்தை பற்றிய
கவிதை மட்டும்
கவிதை சொல்கிறது!!
♥ ♥ ♥
தேநீர்மழை::
தேநீர்மழை
♥ ♥
¤
தேநீரின் சுவை
கூடிக்கொண்டே
போகிறது
மழை அதிகமாக அதிகமாக!
¤
உடல் நனையாத
பெருமழை
நாளொன்றில்
மனம் நனைத்தது
குடல் நனைத்த
தேநீர்த்துளி!
¤
ஒருகோப்பைத் தேநீரை
மணிக்கணக்கில்
சுவைப்பதற்கு
மழையை விட
சிறந்த காரணம்
ஏதுமிருக்க முடியாது!
¤
தேநீரோடு மழையை ரசிக்க
நீயிருக்கிறாய்..
உன்னோடு மழையை
ரசிக்க நானிருக்கிறேன்..
மழையோடு மழையை
ரசிக்கத்தான்
யாருமில்லை!
¤
அந்த தேநீர் விடுதியின் மேஜையிலிருந்த
காலிக் கோப்பை
உணர்த்தியது
யாரோ ஒருவர்
முழு மழையையும்
பருகிவிட்டுப்
போயிருந்ததை!
¤
ஒரு கையில் தேநீர்
மறு கையில் சிகரெட்
கவனிக்காத நேரத்தில்
கடந்துவிட்டது மழை!
¤
♥ ♥ ♥
Monday 1 October 2012
மழையாசை::
♥ ♥
பூப்பெய்திய
அந்தப் பெண்ணுக்கும்
மழையில் நனைய ஆசைதான்..
விமர்சனங்களுக்கு
பயந்துதான்
அவளும் விலகி நடக்கிறாள்!!
♥ ♥ ♥
Saturday 29 September 2012
மழைக்காரணம்::
♥ ♥
இப்போது பெய்யும்
மழைக்கு காரணம்
முன் எப்போதோ பெய்த
மழையில் முளைத்து வளர்ந்த
மரம்!!
♥ ♥ ♥
பிழை மழை::
♥ ♥
மழை சில நேரங்களில்
பிழையாகி விடுகிறது
பொத்தல் விழுந்த
கூரைமேல் பொழிகையில்!!
♥ ♥ ♥
Thursday 27 September 2012
குழந்தை மனம்::
♥ ♥
எப்போதும்
புரியாத பாஷையில்
உளறிக்
கொண்டிருந்தாலும்
புத்த அமைதியில்
இயங்கிக் கொண்டிருக்கிறது
குழந்தையின் மனம்!!
♥ ♥ ♥
Wednesday 26 September 2012
மகள்::
♥ ♥
யாரோ ஒருவருக்கு
மனைவியாகவும்
யாரோ ஒருவருக்கு
தாயாகவும்
உருமாறிக் கொண்டிருக்கிறாள்
படைப்பாற்றல் மிகுந்த
என் குட்டி மகள்
பிருந்தா!!
♥ ♥ ♥
வாசம்::
♥ ♥
நீ என்னோடு
இருக்கையில்
ஆம்பலாகவும்
என்னை விட்டுப்
பிரிகையில் சாம்பலாகவும்
வாசம் வீசும்
என் இதயம்!!
♥ ♥ ♥
Monday 24 September 2012
கவிதை::
♥ ♥
நீ என்னுடன்
இருக்கும் போதெல்லாம்
நான் கவிதை பற்றி
சிந்திப்பதுமில்லை..
எழுதுவதுமில்லை..
அப்போது கவிதையோடு
வாழ்ந்து கொண்டிருப்பேன்!!
♥ ♥ ♥
Friday 21 September 2012
மோகம்::
♥ ♥
நேயர்விருப்பத்தில்
உன்பெயரும் என்பெயரும்
சேர்ந்து ஒலித்த
அக்கணத்தில்
தீர்ந்துபோனது
விருப்பப்பாடலின்
தீராமோகம்!!
♥ ♥ ♥
Thursday 20 September 2012
காதல்::
♥ ♥
நானும் நீயும்
கோவிலில்
சந்தித்துக்
கொள்ளும் போது
நடமாடும்
தெய்வமாய்
கோவிலுக்குள்
உலவிக்
கொண்டிருக்கும்
காதல்!!
♥ ♥ ♥
Tuesday 18 September 2012
கவிஞன்::
♥ ♥
நல்லவேளை..
காதலிக்க நீ
கிடைத்தாய்!
இல்லையென்றால்
நான் கவிஞனாகியிருக்க
முடியாது!!!
♥ ♥ ♥
Monday 17 September 2012
விதி::
♥ ♥
நில்
கவனி
காதலி!
இப்படித்தான்
ஆரம்பித்தது
உனக்கான எனது
கவிதை விதி!!
♥ ♥ ♥
Friday 14 September 2012
புன்னகை::
♥ ♥
உன் புன்னகையால்
நீ என்னை
மன்னிக்கும்
போதெல்லாம்
மீண்டும் மீண்டும்
தவறு செய்யத்
தோன்றுகிறது!!
♥ ♥ ♥
Thursday 13 September 2012
பாக்கியம்::
♥ ♥
கடற்கரை குதிரை
சவாரியில் உன்னை
ஏற்றிப்போகும்
குதிரைக்கு மட்டும்
வாய்த்துவிடுகிறது
பஞ்சுமூட்டையை
சுமந்து செல்லும்
பாக்கியம்!!
♥ ♥ ♥
Monday 10 September 2012
ஒருதலைக் காதல்::
♥ ♥
நான்காய் மடித்து
நாளொரு காதல்கடிதம்
நான் தந்தேன்..
இறுதியில்
இரண்டாய் மடித்த உனது
திருமண அழைப்பிதழோடு
நீ நிற்க,
வாழ்வா சாவா என்ற
தடுமாற்றத்தில்
இருதலைக் கொள்ளியாய்
இடையில் நிற்கிறது என்
ஒருதலைக் காதல்!!
♥ ♥ ♥
Sunday 9 September 2012
கரை::
♥ ♥
ஓடிவந்து நீ
கால் நனைத்தாய்...
ஆற்றங்கரை
தீர்த்தக்கரையானது!!
♥ ♥ ♥
Saturday 8 September 2012
Thursday 6 September 2012
தேவதை::
♥ ♥
எவரிடத்தில் காதல்
நிரம்பியிருக்கிறதோ
அவரிடத்தில்
தேவதை வசிக்கிறாள்!!
♥ ♥ ♥
Wednesday 5 September 2012
கவிதை::
♥ ♥
கற்பணையின்
உச்சம் தொட
நினைத்து
உன்னைப்பற்றி
கவிதையொன்று
புனைந்தேன்...
கடைசியில்
அது ஒரு
உச்சகட்ட
கவிதையாகிப்
போனது போ!
♥ ♥ ♥
முத்தம்::
♥ ♥
நீ என்னோடு நடத்தும்
சண்டைகளுக்காகவே
காத்துக்கிடக்கிறது
சமாதான
முத்தமொன்று!
♥ ♥ ♥
Saturday 1 September 2012
காதல்::
காதல்
♥ ♥
என்னைத் தவிர்த்து
ஏதாவது ஒரு
கவிதை எழுது என்கிறாய்...
அப்படியானால்
கவிதை தவிர
வேறு ஏதாவதுதான்
எழுத வேண்டும்!
♥ ♥ ♥
Friday 31 August 2012
சாயல்::
சாயல்
★★
அம்மாவின்
சாயலுமின்றி
அப்பாவின்
சாயலுமின்றி
கடவுளின் சாயலில்
பிரசவிக்கிறது
குழந்தை!
★★★
Thursday 30 August 2012
Wednesday 29 August 2012
ரகசியம்::
★★
புதருக்குள் மேயச்சென்ற
ஆட்டுக்குட்டியை,
அங்கெல்லாம்
போக்கூடாது,
முள்ளு குத்திரும்
என, வலுக்கட்டாயமாக
தூக்கிவரும் சிறுமி
பிருந்தாவுக்குத்
தெரியாது...
அடுத்தவாரம்
ஆத்துமேட்டு
அய்யனார் கோவிலில்
நடக்கப்போகும்
நேர்த்திக்கடன்
பற்றிய ரகசியம்!
★★★
என் பாடல் ::
பல்லவி:
காதலே காதலே எனக்குள் நீ இறங்கு!
உயிரில் இறங்கி நீ கிறங்கு!
காதலே காதலே
எனக்குள் நீ இறங்கு!
உயிரில் இறங்கி நீ கிறங்கு!
சுவாசம் முழுதும்
உன்னை நிரப்பி என்னை நீயும் ஆளு!
கனவு முழுதும் கவிதை பரப்பி இரவில் கொஞ்சம் நீளு!
காதலே காதலே
எனக்குள் நீ இறங்கு!
கொஞ்சம் இறங்கி நீ கிறங்கு!
சரணம்: 1
ஆசை என்பது மாயம்தான்!
என்னுள் வந்ததும்
நியாயம்தான்!
களவாடி
கண்முன் உலவாடியதே!
அன்று நானொரு பனித்துளி!
இன்று நான் பெருமழைத்துளி!
காதலாலே நானும்
வாழ்தலானேனே!
அன்னை தந்தை
நண்பன் தோழி
யாவும் நீயே..
நீ என் யாதுமானதுவே!
(காதலே காதலே...)
சரணம்: 2
உண்ண மறந்து
உறங்க மறுத்து
கண் முன்னே கரைகிறேன்!
பகலும்இரவும் சுருங்கிசுருங்கி
சூன்யமாய் நான் திரிகிறேன்!
இடியும்மழையும்
சேர்ந்து பொழிந்தும்
என் இதயம் வரண்டு துடிக்கிறேன்!
இரவல் வாங்கி
சிரித்து சிரித்து
இன்னும் ஏன்தான்
நடிக்கிறேன்?
காதலாலே மாறினேன்..
தினம் உச்சிவானில்
ஏறினேன்!
( காதலே காதலே..)
Tuesday 28 August 2012
கற்றல்::
★ ★
கடைக்குட்டி பிருந்தாவை
மடியிலமர்த்தி,
மழை பற்றி சொல்லிக்
கொண்டிருந்தேன்..
கீழிறங்கி வாசலுக்கு
ஓடிய அவள் எனக்கு
நனைதல் பற்றி
சொல்லிக் கொடுத்தாள்!
★ ★ ★
Monday 27 August 2012
மெய் :
♥
பொய் சொன்னால்
உனக்கு
பிடிக்காதெனத் தெரிந்தும்
பொய் சொல்லி
விடுகிறேன்...
பொய் சொல்வது
எனக்கும் பிடிக்காதென்று!
♥ ♥
Sunday 26 August 2012
கடிதம் : 20
கிழிபடாத காதல்
கடிதங்கள் : 20
♥
27.3.2001 4.30 pm
பிருந்தா என்கிற
தேவதை மனைவிக்கு,
இத்தனை நாட்களாய்
காதலியாய்
எனக்குள்ளிருந்த நீ,
நேற்றிலிருந்து
மனைவியாய்
பதவி உயர்வு
பெற்றுள்ளாய்!
உண்மையில்
திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயக்கப்படுவதும்
உன்னோடு
நிச்சயக்கப்படுவதும்
ஒன்றுதான்!
உனக்கு நானும்
எனக்கு நீயும்
எழுதிய காதல் வழியும்
கடிதங்களை வாசித்து வாசித்து
நேற்றைய
முதலிரவு மடலிரவாய்
விடிந்தது!
வெற்றியின் பூரிப்பில்
சிரிப்பதை விட,
கிழிபடாத கடிதங்களில்
சிலிர்த்துக் கிடந்தது காதல்!
எனது அத்தனை
கடிதங்களையும்
இத்தனைநாளாய்
எப்படி பாதுகாப்பாய்
வைத்திருந்தாய் என நான்
கேட்டதற்கு,
அஞ்சறைப் பெட்டியின் மறைவில்
வைத்திருந்தேன்
என்று கூறினாயே...
உண்மையில் பல
தோற்றுப் போன
காதலர்களின்
கடிதங்கள் இன்னும்
பரண் மேலும்,
அஞ்சறைப் பெட்டியின் மறைவிலும்தான்
வாழ்ந்து
கொண்டிருக்கிறது
அழியாக் காதலாக!
அப்படியிருக்க,
நமக்கு வரப்பிரசாதமாய்
வாய்த்திருக்கும்
இந்த தீராக்காதலை,
ஒவ்வொரு நொடியும்
கொண்டாடி
மெருகேற்றுவோம்!
எப்படியோ,
இத்தனைநாட்களாய்
காதலனாய் கவியெழுதிக்
கொண்டிருந்த நான்,
இன்று உன் கணவனாய்
கவிதையாகிப்
போனேன் போ...
♥ காதல் நம்முள்
வாழட்டும் : நம்மை
ஆளட்டும் ♥
இப்படிக்கு,
உன் சுவாசிப்பில்
வசிக்கும் நான்...
( காதலே ஜெயம் )
Saturday 25 August 2012
கடிதம் : 19
கிழிபடாத காதல் கடிதங்கள் : 19
♥
13.1.2001 10.00am
பிருந்தா என்கிற தேவதைக்கு,
நீ சொன்னதைப் போலவே காதலை
கல்யாணத்திற்கு
கூட்டிச் சென்றுவிட்டாய்..
இன்னும் இரண்டு
மாதங்களில்
நம் திருமணம் காதலால்
நிச்சயக்கப்படுகிறது!
அடிவயிற்றில் ஆயிரம்
பட்டாம்பூச்சிகள் ஒன்றாய் பறப்பது
போன்ற உணர்வு
உனக்குள்ளும் இருக்குமென நினைக்கிறேன்!
முன்பு கடிதங்களை
எண்ணிக் கொண்டிருந்த நான்,
இப்போது நாட்காட்டியின்
காகிதங்களை
கணக்கிட்டுக்
கொண்டிருக்கிறேன்!
இரண்டு மாதங்களுக்குப் பிறகு
என் வாழ்க்கை
முழுவதுமாய்
ஆசீர்திக்கப்படும்..
என்வீட்டுக்
கம்பிக்கொடியில்
இனி துப்பட்டா
வானவில்கள்
காயத்தொடங்கும்..
படிக்கட்டுகள் கொலுசொலியில்
கிறங்கிக் கிடக்கும்!
சமயலறை முழுக்க
தேவதைவாசம்
நிரம்பிவழியும்!
தோட்டத்து மல்லிகைகள் உன்
கூந்தலேறி மணம்பரப்ப
மல்லுக்கட்டும்!
பூஜையறைக் கடவுளர்கள் நீ
தீபமேற்ற தவமிருக்கும்!
வீடெங்கும் உன்
வசியக்குரல்
கச்சேரி நடத்தும்!
மொத்தத்தில்
காடாய் விரிந்துகிடக்கும்
என் உலகம் இனி
பிருந்தாவனமாய்
பூத்துக் குலுங்கும்!
சீக்கிரமாய் வா....
உனது வரவிற்காக
வாசலோரம்
காத்திருக்கிறது
என் மீதிக் காதல்..!
♥ காதல் நம்
உலகெங்கும்
வியாபித்திருக்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
( பரிமாற்றம் தொடரும்..... )
Friday 24 August 2012
கடிதம் : 18
கிழிபடாத காதல் கடிதங்கள் : 18
♥
23.8.2000 1.00pm
பிருந்தா என்கிற தேவதைக்கு,
எப்போதும் வெட்கத்தோடு
என்னருகில் வரும்
நீ, நேற்று முன்தினம்
துக்கத்தோடு வந்தாய்..
வீட்டில் திருமணம் பற்றி
பேசுகிறார்கள், ஏதாவது செய் என்றாய்..
நானென்ன செய்வேன்?
எனக்கு உன்னைக்
காதலித்துக் கொண்டிருக்க மட்டுமே தெரியும்!
வீட்டைவிட்டு வெளியேறவோ, பதிவுத்திருமணம் செய்யவோ உனக்கும் எனக்கும் துளியும்
உடன்பாடில்லை!
களவைக் கற்றுத்தந்த காதல்
நமக்கு கண்ணியத்தையும்
கற்றுத் தந்திருக்கிறது!
அந்த வகையில்
நாம் காதலுக்கு
கடன்பட்டிருக்கிறோம்.
ஒரு வாரமாய் உன்னிடம் எந்த சலனமுமில்லை..
எந்த வருத்தமுமில்லை..
காதலை விரைவில்
கல்யாணத்திற்கு
கொண்டு செல்வேனென
தோழியிடம் கூறினாயாம்..
உண்மையில் இக்கணத்தில்
என்னை அச்சம் கலந்த ஒரு
பெண்ணாகவும்,
உன்னை வீரம் நிறைந்த ஒரு
ஆணாகவும் உணர்கிறேன்...
உனக்கு உன் தந்தை மேல் இருக்கும்
நம்பிக்கையை விட,
ஒருமடங்கு அதிகமாய் எனக்கு,
காதல்மேல் நம்பிக்கையிருக்கிறது!!
காதல் என்னைக் கைவிடாதென்ற
உறுதியோடு
காத்திருக்கிறேன்...
♥ காதல் நமக்குத்
துணையிருக்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
( பரிமாற்றம் தொடரும்..... )
Thursday 23 August 2012
கடிதம் : 17
கிழிபடாத காதல் கடிதங்கள் : 17
♥
21.5.2000 11.00 pm
பிருந்தா என்கிற தேவதைக்கு,
முன்பு எப்போதாவது என்
கடைக்கு வந்துசெல்லும் நீ,
இப்போதெல்லாம்
எப்போதும் வந்துசெல்கிறாய்!
உடன் தோழி இருப்பதாலோ என்னவோ உதட்டில் புன்னகைக்கும்
வார்த்தைகளை புறந்தள்ளி,
பார்வையில் பல கவிதைகள்
சொல்லிப்போகிறாய்..
உன் கையசைப்பிலும்
கண்ணசைவிலும்
சுற்றியிருப்போர்க்கெல்லாம்
நம் காதல் சுட்டிக்
காட்டப்பட்டு விட்டது!
கேலியும் கிண்டலுமாய் என்
இளமைக்காலம் கழிந்து
கொண்டிருக்க,
காதலோ இன்னுமின்னும்
கூடிக் கொண்டேயிருக்கிறது!
நல்லவேளை..
காதல் நம்மைத்
தேர்ந்தெடுத்தது..
இல்லையென்றால்
எழுதி முடிக்கப்படாத
கவிதையாய்
பாதியிலேயே முடிந்திருக்கும்
நம் வாழ்க்கை!
♥ காதல் நம்மை முழுமையாக்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
( பரிமாற்றம் தொடரும்..... )
Wednesday 22 August 2012
கடிதம் : 16
கிழிபடாத காதல் கடிதங்கள் : 16
♥
2.3.2000 11.00 pm
பிருந்தா என்கிற தேவதைக்கு,
முன்பு நான் சொன்னதைப் போலவே,
தொலைபேசியாலும்,
அலைபேசியாலும்
நமது கடிதங்கள் கொஞ்சம்
காணாமல் போயிருக்கிறது..
கல்லூரி முடித்து நீ ஒரு அலுவலகத்தில்
பணிபுரிகிறாய்..
நான் ஒரு பொம்மைக்கடை
வைத்திருக்கிறேன்..
இந்த
பொம்மைக்கடையைக்கூட,
காதல்தான்
எனக்கு தேர்ந்தெடுத்துத்
தந்தது!
ஆமாம்..
காதலுக்கு அழகுணர்வு அதிகம்!
நீ எனது கடை வழியாகத்தானே
அலுவலகம் செல்கிறாய்?
போகையிலும் வருகையிலும்
உன் பார்வையை
கொஞ்சம் வீசிச் செல்..
எப்போதாவது என் கடைக்கு வர நினைத்தால்,
குழந்தை வாடிக்கையாளர்கள்
இல்லாதபோது வா..
ஏனென்றால்,
கடைக்குள் இருக்கும்
அத்தனை குழந்தைகளும்
உன்னையே கேட்டு
அடம்பிடித்தால் நானென்ன செய்வேன்?
நீ என் கடைக்கு வருகின்ற நாள்வரை,
நானும் ஒரு பொம்மையாகவே
அமர்ந்திருப்பேன்!
விரைவில் சந்திப்போம்....
♥ தினந்தோறும்
காதல்தரிசனம்
நமக்கு கிடைக்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
Tuesday 21 August 2012
கடிதம் : 15
கிழிபடாத காதல் கடிதங்கள் : 15
♥
22.6.1999 7.20 am
பிருந்தா என்கிற தேவதைக்கு,
ஒருவருடக் கல்லூரி வாழ்க்கை எப்படிக் கழிந்ததென்றே
தெரியவில்லை..
இந்த ஒருவருடத்தில் கடிதப் பரிமாற்றத்தை விட,
கல்லூரி மரத்தடியில் நமக்குள் நிகழ்ந்த
வார்த்தைப் பரிமாற்றங்களே அதிகமாயிருந்தது.
இதுதவிர நாகரிகம் கொண்டுவந்த
தொலைபேசியால்,
கடிதங்களெல்லாம்
கொஞ்சம் தொலைவாகி தொலைந்து போக
ஆரம்பித்திருந்தாலும்,
காதல் நமக்குள் இன்னும் நெருங்கி
வர
ஆரம்பித்திருக்கிறது.
நீ கல்லூரி வராத
நாட்களில் தொலைபேசிதான்
உன்னை என் அருகில் வைத்திருந்தது!
ஒருவிதத்தில் தொலைபேசியும்
ஒரு பாக்கியசாலிதான்!
நீ எனக்குத் தந்த
எண்ணற்ற ஈர முத்தங்களால்
தினம்தினம் அதற்கு
கிடைக்கிறது
பன்னீர்அஞ்சலி!
ஓரிரு வருடங்களில்
அலைபேசியும் வரப்போகிறதாம்..
எது வந்தாலும் சரி,
நம் காதல் கடிதத்திலேயே பயணிக்கட்டும்!
♥ தீராக்காதல் திகட்டாதிருக்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)