Sunday 14 October 2012

மழைவாழ்த்து::

மழைவாழ்த்து

♥ ♥ ♥

நேற்று பெய்த மழையில்

இன்று முளைத்த தளிரே

நாளைய மழைக்கு காரணம்!

¤

இன்றும் மறக்காமல்

வந்திருந்த மழையில் நனைய

மறந்தேவிட்டேன்!

¤

மரணித்துப் புதைந்தாலும்

ஜனனம் தர மறப்பதில்லை

நன்றியுள்ள மழை!

¤

மழைநாளில்

மெருகேற்றப்படுகிறது

அனைவரின் கலைந்த காதலும்!

¤

மழைக்கு

நிகர்

மழையே!

¤

அதிகமானோரால்

மிக அதிகமாய்

நேசிக்கப்

படுவதொன்றும்

ஆச்சர்யமில்லை..

மழையென்றாலே

அதிகம்தான்!

¤

தொப்பலாய் நனைய ஆசைதான்..

மழைதான் நின்றுவிட்டது!

¤

நனைபவரைப் பொறுத்தே

மழைக்கு கிடைக்கும்

வாழ்த்தும் வசையும்!

¤

கொஞ்சம் மழை

கொஞ்சம் தேநீர்

நிறைய ஞாபகங்கள்!

¤

மழையை

ஒப்பிடலாம்

மழையோடு மட்டும்!

¤

ஊடலில் தனித்திருப்போரை

அச்சத்தில் அணைக்கவைத்து

காதலில் திளைக்கச்

செய்கிறது

இடியுடன் கூடிய மழை!

¤

நல்லவேளை

குடையெடுத்துச்

செல்லவில்லை..

நல்லமழை!

¤

பருவம் தவறிப்

பொய்த்த மழை

புருவம் உயர்த்துமளவிற்கு

பெய்துவிடுகிறது

ஏதாவதொரு நாளில்!

¤

ஆயிரம் கால்களில்

ஆனந்த தாண்டவம்..

இடியோடு ஒரு பெருமழை!

♥ ♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment