மழைவாழ்த்து
♥ ♥ ♥
நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்த தளிரே
நாளைய மழைக்கு காரணம்!
¤
இன்றும் மறக்காமல்
வந்திருந்த மழையில் நனைய
மறந்தேவிட்டேன்!
¤
மரணித்துப் புதைந்தாலும்
ஜனனம் தர மறப்பதில்லை
நன்றியுள்ள மழை!
¤
மழைநாளில்
மெருகேற்றப்படுகிறது
அனைவரின் கலைந்த காதலும்!
¤
மழைக்கு
நிகர்
மழையே!
¤
அதிகமானோரால்
மிக அதிகமாய்
நேசிக்கப்
படுவதொன்றும்
ஆச்சர்யமில்லை..
மழையென்றாலே
அதிகம்தான்!
¤
தொப்பலாய் நனைய ஆசைதான்..
மழைதான் நின்றுவிட்டது!
¤
நனைபவரைப் பொறுத்தே
மழைக்கு கிடைக்கும்
வாழ்த்தும் வசையும்!
¤
கொஞ்சம் மழை
கொஞ்சம் தேநீர்
நிறைய ஞாபகங்கள்!
¤
மழையை
ஒப்பிடலாம்
மழையோடு மட்டும்!
¤
ஊடலில் தனித்திருப்போரை
அச்சத்தில் அணைக்கவைத்து
காதலில் திளைக்கச்
செய்கிறது
இடியுடன் கூடிய மழை!
¤
நல்லவேளை
குடையெடுத்துச்
செல்லவில்லை..
நல்லமழை!
¤
பருவம் தவறிப்
பொய்த்த மழை
புருவம் உயர்த்துமளவிற்கு
பெய்துவிடுகிறது
ஏதாவதொரு நாளில்!
¤
ஆயிரம் கால்களில்
ஆனந்த தாண்டவம்..
இடியோடு ஒரு பெருமழை!
♥ ♥ ♥ ♥
Sunday 14 October 2012
மழைவாழ்த்து::
Published with Blogger-droid v2.0.4
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment