சாயல்
★★
அம்மாவின்
சாயலுமின்றி
அப்பாவின்
சாயலுமின்றி
கடவுளின் சாயலில்
பிரசவிக்கிறது
குழந்தை!
★★★
Friday 31 August 2012
சாயல்::
Thursday 30 August 2012
Wednesday 29 August 2012
ரகசியம்::
★★
புதருக்குள் மேயச்சென்ற
ஆட்டுக்குட்டியை,
அங்கெல்லாம்
போக்கூடாது,
முள்ளு குத்திரும்
என, வலுக்கட்டாயமாக
தூக்கிவரும் சிறுமி
பிருந்தாவுக்குத்
தெரியாது...
அடுத்தவாரம்
ஆத்துமேட்டு
அய்யனார் கோவிலில்
நடக்கப்போகும்
நேர்த்திக்கடன்
பற்றிய ரகசியம்!
★★★
என் பாடல் ::
பல்லவி:
காதலே காதலே எனக்குள் நீ இறங்கு!
உயிரில் இறங்கி நீ கிறங்கு!
காதலே காதலே
எனக்குள் நீ இறங்கு!
உயிரில் இறங்கி நீ கிறங்கு!
சுவாசம் முழுதும்
உன்னை நிரப்பி என்னை நீயும் ஆளு!
கனவு முழுதும் கவிதை பரப்பி இரவில் கொஞ்சம் நீளு!
காதலே காதலே
எனக்குள் நீ இறங்கு!
கொஞ்சம் இறங்கி நீ கிறங்கு!
சரணம்: 1
ஆசை என்பது மாயம்தான்!
என்னுள் வந்ததும்
நியாயம்தான்!
களவாடி
கண்முன் உலவாடியதே!
அன்று நானொரு பனித்துளி!
இன்று நான் பெருமழைத்துளி!
காதலாலே நானும்
வாழ்தலானேனே!
அன்னை தந்தை
நண்பன் தோழி
யாவும் நீயே..
நீ என் யாதுமானதுவே!
(காதலே காதலே...)
சரணம்: 2
உண்ண மறந்து
உறங்க மறுத்து
கண் முன்னே கரைகிறேன்!
பகலும்இரவும் சுருங்கிசுருங்கி
சூன்யமாய் நான் திரிகிறேன்!
இடியும்மழையும்
சேர்ந்து பொழிந்தும்
என் இதயம் வரண்டு துடிக்கிறேன்!
இரவல் வாங்கி
சிரித்து சிரித்து
இன்னும் ஏன்தான்
நடிக்கிறேன்?
காதலாலே மாறினேன்..
தினம் உச்சிவானில்
ஏறினேன்!
( காதலே காதலே..)
Tuesday 28 August 2012
கற்றல்::
★ ★
கடைக்குட்டி பிருந்தாவை
மடியிலமர்த்தி,
மழை பற்றி சொல்லிக்
கொண்டிருந்தேன்..
கீழிறங்கி வாசலுக்கு
ஓடிய அவள் எனக்கு
நனைதல் பற்றி
சொல்லிக் கொடுத்தாள்!
★ ★ ★
Monday 27 August 2012
மெய் :
♥
பொய் சொன்னால்
உனக்கு
பிடிக்காதெனத் தெரிந்தும்
பொய் சொல்லி
விடுகிறேன்...
பொய் சொல்வது
எனக்கும் பிடிக்காதென்று!
♥ ♥
Sunday 26 August 2012
கடிதம் : 20
கிழிபடாத காதல்
கடிதங்கள் : 20
♥
27.3.2001 4.30 pm
பிருந்தா என்கிற
தேவதை மனைவிக்கு,
இத்தனை நாட்களாய்
காதலியாய்
எனக்குள்ளிருந்த நீ,
நேற்றிலிருந்து
மனைவியாய்
பதவி உயர்வு
பெற்றுள்ளாய்!
உண்மையில்
திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயக்கப்படுவதும்
உன்னோடு
நிச்சயக்கப்படுவதும்
ஒன்றுதான்!
உனக்கு நானும்
எனக்கு நீயும்
எழுதிய காதல் வழியும்
கடிதங்களை வாசித்து வாசித்து
நேற்றைய
முதலிரவு மடலிரவாய்
விடிந்தது!
வெற்றியின் பூரிப்பில்
சிரிப்பதை விட,
கிழிபடாத கடிதங்களில்
சிலிர்த்துக் கிடந்தது காதல்!
எனது அத்தனை
கடிதங்களையும்
இத்தனைநாளாய்
எப்படி பாதுகாப்பாய்
வைத்திருந்தாய் என நான்
கேட்டதற்கு,
அஞ்சறைப் பெட்டியின் மறைவில்
வைத்திருந்தேன்
என்று கூறினாயே...
உண்மையில் பல
தோற்றுப் போன
காதலர்களின்
கடிதங்கள் இன்னும்
பரண் மேலும்,
அஞ்சறைப் பெட்டியின் மறைவிலும்தான்
வாழ்ந்து
கொண்டிருக்கிறது
அழியாக் காதலாக!
அப்படியிருக்க,
நமக்கு வரப்பிரசாதமாய்
வாய்த்திருக்கும்
இந்த தீராக்காதலை,
ஒவ்வொரு நொடியும்
கொண்டாடி
மெருகேற்றுவோம்!
எப்படியோ,
இத்தனைநாட்களாய்
காதலனாய் கவியெழுதிக்
கொண்டிருந்த நான்,
இன்று உன் கணவனாய்
கவிதையாகிப்
போனேன் போ...
♥ காதல் நம்முள்
வாழட்டும் : நம்மை
ஆளட்டும் ♥
இப்படிக்கு,
உன் சுவாசிப்பில்
வசிக்கும் நான்...
( காதலே ஜெயம் )
Saturday 25 August 2012
கடிதம் : 19
கிழிபடாத காதல் கடிதங்கள் : 19
♥
13.1.2001 10.00am
பிருந்தா என்கிற தேவதைக்கு,
நீ சொன்னதைப் போலவே காதலை
கல்யாணத்திற்கு
கூட்டிச் சென்றுவிட்டாய்..
இன்னும் இரண்டு
மாதங்களில்
நம் திருமணம் காதலால்
நிச்சயக்கப்படுகிறது!
அடிவயிற்றில் ஆயிரம்
பட்டாம்பூச்சிகள் ஒன்றாய் பறப்பது
போன்ற உணர்வு
உனக்குள்ளும் இருக்குமென நினைக்கிறேன்!
முன்பு கடிதங்களை
எண்ணிக் கொண்டிருந்த நான்,
இப்போது நாட்காட்டியின்
காகிதங்களை
கணக்கிட்டுக்
கொண்டிருக்கிறேன்!
இரண்டு மாதங்களுக்குப் பிறகு
என் வாழ்க்கை
முழுவதுமாய்
ஆசீர்திக்கப்படும்..
என்வீட்டுக்
கம்பிக்கொடியில்
இனி துப்பட்டா
வானவில்கள்
காயத்தொடங்கும்..
படிக்கட்டுகள் கொலுசொலியில்
கிறங்கிக் கிடக்கும்!
சமயலறை முழுக்க
தேவதைவாசம்
நிரம்பிவழியும்!
தோட்டத்து மல்லிகைகள் உன்
கூந்தலேறி மணம்பரப்ப
மல்லுக்கட்டும்!
பூஜையறைக் கடவுளர்கள் நீ
தீபமேற்ற தவமிருக்கும்!
வீடெங்கும் உன்
வசியக்குரல்
கச்சேரி நடத்தும்!
மொத்தத்தில்
காடாய் விரிந்துகிடக்கும்
என் உலகம் இனி
பிருந்தாவனமாய்
பூத்துக் குலுங்கும்!
சீக்கிரமாய் வா....
உனது வரவிற்காக
வாசலோரம்
காத்திருக்கிறது
என் மீதிக் காதல்..!
♥ காதல் நம்
உலகெங்கும்
வியாபித்திருக்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
( பரிமாற்றம் தொடரும்..... )
Friday 24 August 2012
கடிதம் : 18
கிழிபடாத காதல் கடிதங்கள் : 18
♥
23.8.2000 1.00pm
பிருந்தா என்கிற தேவதைக்கு,
எப்போதும் வெட்கத்தோடு
என்னருகில் வரும்
நீ, நேற்று முன்தினம்
துக்கத்தோடு வந்தாய்..
வீட்டில் திருமணம் பற்றி
பேசுகிறார்கள், ஏதாவது செய் என்றாய்..
நானென்ன செய்வேன்?
எனக்கு உன்னைக்
காதலித்துக் கொண்டிருக்க மட்டுமே தெரியும்!
வீட்டைவிட்டு வெளியேறவோ, பதிவுத்திருமணம் செய்யவோ உனக்கும் எனக்கும் துளியும்
உடன்பாடில்லை!
களவைக் கற்றுத்தந்த காதல்
நமக்கு கண்ணியத்தையும்
கற்றுத் தந்திருக்கிறது!
அந்த வகையில்
நாம் காதலுக்கு
கடன்பட்டிருக்கிறோம்.
ஒரு வாரமாய் உன்னிடம் எந்த சலனமுமில்லை..
எந்த வருத்தமுமில்லை..
காதலை விரைவில்
கல்யாணத்திற்கு
கொண்டு செல்வேனென
தோழியிடம் கூறினாயாம்..
உண்மையில் இக்கணத்தில்
என்னை அச்சம் கலந்த ஒரு
பெண்ணாகவும்,
உன்னை வீரம் நிறைந்த ஒரு
ஆணாகவும் உணர்கிறேன்...
உனக்கு உன் தந்தை மேல் இருக்கும்
நம்பிக்கையை விட,
ஒருமடங்கு அதிகமாய் எனக்கு,
காதல்மேல் நம்பிக்கையிருக்கிறது!!
காதல் என்னைக் கைவிடாதென்ற
உறுதியோடு
காத்திருக்கிறேன்...
♥ காதல் நமக்குத்
துணையிருக்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
( பரிமாற்றம் தொடரும்..... )
Thursday 23 August 2012
கடிதம் : 17
கிழிபடாத காதல் கடிதங்கள் : 17
♥
21.5.2000 11.00 pm
பிருந்தா என்கிற தேவதைக்கு,
முன்பு எப்போதாவது என்
கடைக்கு வந்துசெல்லும் நீ,
இப்போதெல்லாம்
எப்போதும் வந்துசெல்கிறாய்!
உடன் தோழி இருப்பதாலோ என்னவோ உதட்டில் புன்னகைக்கும்
வார்த்தைகளை புறந்தள்ளி,
பார்வையில் பல கவிதைகள்
சொல்லிப்போகிறாய்..
உன் கையசைப்பிலும்
கண்ணசைவிலும்
சுற்றியிருப்போர்க்கெல்லாம்
நம் காதல் சுட்டிக்
காட்டப்பட்டு விட்டது!
கேலியும் கிண்டலுமாய் என்
இளமைக்காலம் கழிந்து
கொண்டிருக்க,
காதலோ இன்னுமின்னும்
கூடிக் கொண்டேயிருக்கிறது!
நல்லவேளை..
காதல் நம்மைத்
தேர்ந்தெடுத்தது..
இல்லையென்றால்
எழுதி முடிக்கப்படாத
கவிதையாய்
பாதியிலேயே முடிந்திருக்கும்
நம் வாழ்க்கை!
♥ காதல் நம்மை முழுமையாக்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
( பரிமாற்றம் தொடரும்..... )
Wednesday 22 August 2012
கடிதம் : 16
கிழிபடாத காதல் கடிதங்கள் : 16
♥
2.3.2000 11.00 pm
பிருந்தா என்கிற தேவதைக்கு,
முன்பு நான் சொன்னதைப் போலவே,
தொலைபேசியாலும்,
அலைபேசியாலும்
நமது கடிதங்கள் கொஞ்சம்
காணாமல் போயிருக்கிறது..
கல்லூரி முடித்து நீ ஒரு அலுவலகத்தில்
பணிபுரிகிறாய்..
நான் ஒரு பொம்மைக்கடை
வைத்திருக்கிறேன்..
இந்த
பொம்மைக்கடையைக்கூட,
காதல்தான்
எனக்கு தேர்ந்தெடுத்துத்
தந்தது!
ஆமாம்..
காதலுக்கு அழகுணர்வு அதிகம்!
நீ எனது கடை வழியாகத்தானே
அலுவலகம் செல்கிறாய்?
போகையிலும் வருகையிலும்
உன் பார்வையை
கொஞ்சம் வீசிச் செல்..
எப்போதாவது என் கடைக்கு வர நினைத்தால்,
குழந்தை வாடிக்கையாளர்கள்
இல்லாதபோது வா..
ஏனென்றால்,
கடைக்குள் இருக்கும்
அத்தனை குழந்தைகளும்
உன்னையே கேட்டு
அடம்பிடித்தால் நானென்ன செய்வேன்?
நீ என் கடைக்கு வருகின்ற நாள்வரை,
நானும் ஒரு பொம்மையாகவே
அமர்ந்திருப்பேன்!
விரைவில் சந்திப்போம்....
♥ தினந்தோறும்
காதல்தரிசனம்
நமக்கு கிடைக்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
Tuesday 21 August 2012
கடிதம் : 15
கிழிபடாத காதல் கடிதங்கள் : 15
♥
22.6.1999 7.20 am
பிருந்தா என்கிற தேவதைக்கு,
ஒருவருடக் கல்லூரி வாழ்க்கை எப்படிக் கழிந்ததென்றே
தெரியவில்லை..
இந்த ஒருவருடத்தில் கடிதப் பரிமாற்றத்தை விட,
கல்லூரி மரத்தடியில் நமக்குள் நிகழ்ந்த
வார்த்தைப் பரிமாற்றங்களே அதிகமாயிருந்தது.
இதுதவிர நாகரிகம் கொண்டுவந்த
தொலைபேசியால்,
கடிதங்களெல்லாம்
கொஞ்சம் தொலைவாகி தொலைந்து போக
ஆரம்பித்திருந்தாலும்,
காதல் நமக்குள் இன்னும் நெருங்கி
வர
ஆரம்பித்திருக்கிறது.
நீ கல்லூரி வராத
நாட்களில் தொலைபேசிதான்
உன்னை என் அருகில் வைத்திருந்தது!
ஒருவிதத்தில் தொலைபேசியும்
ஒரு பாக்கியசாலிதான்!
நீ எனக்குத் தந்த
எண்ணற்ற ஈர முத்தங்களால்
தினம்தினம் அதற்கு
கிடைக்கிறது
பன்னீர்அஞ்சலி!
ஓரிரு வருடங்களில்
அலைபேசியும் வரப்போகிறதாம்..
எது வந்தாலும் சரி,
நம் காதல் கடிதத்திலேயே பயணிக்கட்டும்!
♥ தீராக்காதல் திகட்டாதிருக்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
Monday 20 August 2012
கடிதம் : 14
கிழிபடாத காதல் கடிதங்கள் : 14
♥
2.8.1998 7.20 am
பிருந்தா என்கிற தேவதைக்கு,
மூன்றுமாத இடைவெளிக்குப் பிறகு,
நீ சேர்ந்த அதே கல்லூரியில்
என்னையும் சேர்த்திருக்கிறது
காதல்!
இத்தனை நாட்களாய்
தாவணித் தேவதையாய்
வலம்வந்த நீ,
இப்போது சுடிதார்
தேவதையாய்
காட்சியளிக்கிறாய்!
கல்லூரியெங்கும்
புதுப்பதுக் காதல்கள்
அரங்கேறிக் கொண்டிருக்க,
நம் காதலோ தினம்தினம்
நம்மை புதுப்பித்துக்
கொண்டிருக்கிறது!
"கல்லூரியில் நீ நின்ற
இடமெல்லாம் கள் ஊறிய இடங்கள்"
என ஒரு கவிஞன்
சொன்னது எவ்வளவு பெரிய
உண்மையென
இப்போது தெரிகிறது!
இந்த மூன்று வருடங்களும்
மூச்சுமுட்டக் காதலிப்போம்..
கவிதைமுட்டக்
கடிதம் எழுதுவோம்..
♥ காதல் இன்னும் நம்மைக் காதலிக்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
கடிதம் : 13
கிழிபடாத காதல் கடிதங்கள் : 13
♥
22.5.1998 4.20 pm
பிருந்தா என்கிற தேவதைக்கு,
செந்தூர முத்திரையிட்டு
அனுப்பிய எனது
முத்தத்தடயத்தை
ஈக்கள் மொய்ப்பதாக எழுதியிருந்தாய்...
ஆனால் நீயனுப்பிய
உன் உதட்டுச்சாய
முத்தத்தை தேனீக்கள்
மொய்க்கிறதே!!!
சரி விடு...
இனிப்பிருந்தால் ஈக்களும்
தேனிருந்தால்
தேனீக்களும்
தேடி வருவது சகஜம்தான்!!
பள்ளி இறுதித் தேர்வுகள்
நடந்து கொண்டிருக்கும்
இந்நேத்தில்
நேற்று டியூசன்
சென்டரில்,
அவசரமாய் ஏதோ எழுதி
என்னிடம் தந்தாய்...
அதைப்படித்த பிறகுதான்
தெரிந்தது...
ஹைக்கூ கவிதை
இப்படித்தான் இருக்குமென்று...
"சீக்கிரமாய் வா...
மழை வரப்போகிறது
கோவிலில் சந்திக்கலாம்!!"
ப்ரியமுடன்,
பிருந்தா.
ஹைக்கூ நடையில் ஒரு
ஹைடெக் கவிதை படைக்க,
உன்னால் மட்டுமே முடியும்
என்பதை தத்ரூபமாய்
காட்டிவிட்டது காதல்!!
♥ காதல் இன்னும் நம்மை
மெருகேற்றட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
Sunday 19 August 2012
கடிதம் : 12
கிழிபடாத காதல் கடிதங்கள் : 12
♥
7.5.1998 1.00 am
பிருந்தா என்கிற தேவதைக்கு,
இக்கடிதம் எழுதுவதற்கு முன்பே, இந்த
வெற்றுக்காகிதத்தை
முத்தத்தால் முழுக்க நிரப்பிவிட்டு,
எழுத ஆரம்பிக்கிறேன்!
காதல்,வெட்கம்,
கண்ணீர்,கவிதை,
என ஒவ்வொன்றையும்
கடிதத்தில் பரிமாறிக்கொண்ட
நாம், இப்போது
முதல்முத்தத்தையும்
கடிதத்திலே பரிமாறிக் கொள்வோம்!
காதலை முதலில் சொன்னதைப் போல, முத்தத்தையும்
நானே முதலில் அனுப்புகிறேன்..
இந்த முதல்முத்தம்
கொஞ்சம் வேடிக்கையானது..
முத்தத் தடயத்தை நீ அறியவேண்டி,
செந்தூரம் குழைத்து அதை என் இதழ்களில் ஒற்றியெடுத்து
கடிதத்தில்
முத்திரையிட்டுள்ளேன்!
காதல் எப்படியெல்லாம்
முயற்சிக்கிறது பார்..
இதை உனது தோழியிடம் கொடுத்தனுப்ப எனக்கு
மனமில்லையென்பதால்,
கவிதைப் புத்தகத்தினுள்
என் முத்தத்தை நான்காய் மடித்து
தருகிறேன்..
அந்தக் கவிதைப் புத்தகத்திலேயே
சிறந்த கவிதை இந்த முத்தமாகத்தான்
இருக்கும்...
இதழ்களால் கவிதை படித்து,
இதயத்தால் எனது
முத்தமேந்திக்கொள்..
♥ காதல் நமக்குள்
பிரியாதிருக்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
Saturday 18 August 2012
கடிதம் : 11
கிழிபடாத காதல் கடிதங்கள் : 11
♥
29,4,1998 11.00 pm
பிருந்தா என்கிற தேவதைக்கு,
காதல்...காதலறிய ஆவல்.
நாம் சந்தித்துக்கொண்ட நாளிலிருந்து,
உறக்கம் உன்னையும் சந்தித்திருக்காது என எண்ணுகிறேன்.
அதுசரி...
கனவினை நேரில்
பார்த்த பிறகு
உறக்கமெதற்கு??
உனது தோழி அடிக்கடி என்னை வினவுகிறாள்...
எப்படி உன் கைக்கெட்டும் காகிதங்களெல்லாம்
கவிதையாகிறதென..
என்ன செய்வது??
நீ பரிசளித்த பேனாவைத்
தூக்கும் போதெல்லாம்,
தலைதூக்கி விடுகிறது
கவிக்கர்வம்!!
எந்தப் பெண்ணோடு பேசும் போதும்
ஒருவித அச்சமாய் தோன்றும் எனக்கு, உன்னோடு பேசுகையில் மட்டும்
கூச்சமாய் இருக்கிறதே ஏன்?
உடல்கள் ஊடலில் இருக்க,
நம் மடல்கள் மட்டும் கூடலில் கலப்பது எப்படி??
உன்னையறியாமல்
உன் கடைவிழிப் பார்வைகள்
என்மேல் வீசப்படுவது எதற்காக??
இதுபோன்ற பதிலில்லாக் கேள்விகளை கேட்டுச் சிரிக்கிறது
காதல்!!
சரி,நான் இனி உறங்கப் போகிறேன்..
கனவிலும் உன்னைக் காதலித்தாக வேண்டும்...
காலம் தாழ்த்தாமல் வந்துவிடு....
♥ நம் ஜீவன் முழுதும் காதல் பரவட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
Thursday 16 August 2012
கடிதம் : 10
கிழிபடாத காதல்
கடிதங்கள் : 10
♥
8.4.1998 3.30 pm
பிருந்தா என்கிற
தேவதைக்கு,
கோவிலில் உன்னை சந்தித்த
அந்த வெள்ளிக்கிழமை
எனக்கு எப்போதும்
தங்கக் கிழமையாகவே
நினைவிலிருக்கும்!
குளிர்காற்றும் மஞ்சள் வெயிலும்
சேர்ந்து பொழிந்த மாலைப்பொழுதில்
உனக்கு முன்பாகவே நான்
வந்திருந்தேன்..
உனக்காய் காத்திருக்கும்
சுகத்திற்காக!
நீ என்னருகில் வர வர தொலைவாகிப்
போனது அந்தக்
கோவிலில் ஆசிவழங்கி வந்த
அத்தனை அம்மன்களும்!
அன்பளிப்பாய் எனக்கொரு பேனா
வாங்கி வந்திருந்தாய்..
அதில்தான் இப்போது காதல் நிரப்பி கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன்!
பிரகாரத்தை சுற்றியபடி நீ என்னென்னமோ
பேசிக்கொண்டு வந்தாய்..
என் விழிகள் உன்னை சுற்றியவாறு
எதையெதையோ
தேடிக் கொண்டிருந்து...
உன் அசைவுகளால் கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை தொலைத்துக் கொண்டிருந்த நேரத்தில்,
நேரமாச்சு.. கிளம்பலாம் என்றாய்!
அடுத்த சந்திப்பு கடற்கரையில் என்று கூறி கையசைத்து விடைபெற்றாய்..
விடைபெற்று நீ மறைந்தபின்னும்
என்னுடனேயே
உலாவிக் கொண்டிருந்தது..
உனது அசைவுகளில் என்
விழிகள் தேடிக்
கொண்டிருந்த
எழுதப்படாத கவிதைகள்!
கோவில் சந்திப்பில்
சிலையான நான்,
கடற்கரை சந்திப்பில்
அலையாகக் காத்திருக்கிறேன்..
மீண்டும் சந்திக்கலாம் வா..!
♥ காதல் நம்மை இன்னும் வெகுதூரம்
கூட்டிச் செல்லட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
கடிதம் : 9
கிழிபடாத காதல்
கடிதங்கள் : 9
♥
1.4.1998 7.30 am
பிருந்தா என்கிற
தேவதைக்கு,
நான் உன்னைக் காதலிக்க ஆரம்பித்த
நாளிலிருந்து,
பிரபஞ்சம் முழுதும் பூக்களால்
நிரம்பியிருப்பதாகவும்,
சுற்றியிருப்போர்
எல்லாம் சூன்யமாய்
கடந்துபோவதாகவும்
தெரிகிறது என்று சொல்கிறாய்...
எனக்கோ உன்னைப்
பார்த்த நாளிலிருந்தே
அப்படித்தான் தெரிகிறது..
எனது சித்திரமும்
சூத்திரமும் நீயடி..
அள்ள அள்ளக் குறையாத உனது
காதல்பாத்திரம் நானடி..
உன்னால் நான் காண்பதையெல்லாம்
கவிதை செய்யவும்
கண்முன்னே
கடவுள் காணவும்
கற்றுக்கொண்டேன்!
காதல் அழிப்பதில்லை..
ஆனால் அளிப்பதுண்டு எனும் தத்துவத்தை
நாம் எழுதும் கவிதைகளில் கண்டேன்..
சரி, எத்தனை நாளைக்குத்தான்
காதலை கடிதத்திலேயே
பரிமாறிக் கொள்வது?
நமது முதல்சந்திப்பு விரைவில் நிகழட்டும்..
தேவதையை பக்தன் ஆலயத்தில் தரிசிப்பதே சிறந்தது என்பதால் முதல்சந்திப்பு
ஆலயத்திலேயே
அரங்கேறட்டும்..
இன்றிலிருந்தே
என்னை நான் தயார்படுத்திக்
கொள்கிறேன்...
நீயும் எனக்கான
வரங்கள் வழங்க தயாராகவே வா!
வரும் வெள்ளிக்கிழமைக்காக
நான் தவமிருக்கிறேன்!
♥ காதல் நம்மை அதிவேகமாய் சந்திக்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
Tuesday 14 August 2012
கடிதம் : 8
கிழிபடாத காதல்
கடிதங்கள் : 8
♥
27.3.1998 7.30 am
பிருந்தா என்கிற
தேவதைக்கு,
"க"-ண்களால் களவாடி
"ணே"-சத்தால் உறவாடி
"ஸ்"-வரமாய் என்னுள் துடிக்கும் இதயம்.. நீ!
சென்றவாரம் என்
பிறந்தநாளுக்காக
நீ எழுதிய வாழ்த்து அட்டையின் வரிகள்தான் இவை..
நீ இப்போதெல்லாம்
கடிதம் எழுதக் கற்றுக்கொண்டாயோ
இல்லையோ, நன்றாய் கவிதையெழுதக்
கற்றுக் கொண்டுள்ளாய்.
நான் கவிதையை
நேசிக்க ஆரம்பித்ததும்,
வாசிக்க ஆரம்பித்ததும்,
யோசிக்க ஆரம்பித்ததும்
இதிலிருந்துதான்!
பொழுதுபோக்கிற்காக
சமையல் குறிப்புகள் மட்டுமே
படித்துக் கொண்டிருந்த உன்னால்,
எப்படி ஷேக்ஸ்பியரை
தோற்கடிக்க முடிந்தது?
எல்லாம் காதலின் செயல்!!
நான் உன் பெயரை கவிதையென்றேன்!
நீயோ, எனது பெயரின் ஒவ்வொரு எழுத்துக்களையும்
கவிதையாக்கி விட்டாய்..
உன்னைத் தேர்ந்தெடுத்த என் காதல்
உண்மையிலேயே
கொடுத்துவைத்து
பிறந்திருக்கிறது..
வேறென்ன சொல்லிவிட முடியும் என்னால்..?
♥ என்றென்றும் காதல் நம்மை
ஆளட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)