கிழிபடாத காதல்
கடிதங்கள் : 5
♥
15.10.1997 11.30 pm
பிருந்தா என்கிற தேவதைக்கு,
உனது கடிதங்களில்லாத இந்த இரண்டுமாத காலத்தில்தான்
என் பலவீனம் உணர்ந்தேன்.
என்ன காரணமோ
என்னை தவிர்க்க நினைத்து என் காதலை தவிக்கச் செய்தாய்..!
இப்போதெல்லாம்
எனக்குள் பட்டாம்பூச்சிகள்
படபடப்பதில்லை..
இதயத்தில் புல்லாங்குழலின் ரீங்கார அதிர்வுகளில்லை..
பூக்காம்பாய் இருந்த பேனா முட்கள் இன்று
தீக்கூம்பாய் எழுத்துக்களை எரிக்கிறது..
அவ்வப்போது இடியுடன் கூடிய
கனமழையொன்று கண்களில் பொழிகிறது..
அஞ்சல் தூதுவர்களான
உன் தோழியும் எனது நண்பனும் கூட காதல்மொழி
பேசி கரைந்து கொண்டிருக்க,
நான் மட்டும்
உறைந்துபோய்க்
கிடக்கிறேன்!
அன்று நீ தந்த வாழ்த்து அட்டைகளின்
வரிகளில்தான்
இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறது
என் காதல்!
ஞாபகமிருக்கிறதா?
அன்று நீ எழுதித்தந்த வரிகள்?
"புற்களைச் சுமந்த பூமி
பனித்துளிகளின் சரணாலயம்..
உன்னைச் சுமக்கும் என் இதயம்
நட்பின் சரணாலயம்.."
இதைத்தான் இரவும் பகலும்
இடைவிடாது ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்!
உன்னைச் சுமக்கும் என் இதயம் காதலின்
சரணாலயம் என
கொஞ்சம் திருத்தி!
போதும்....
இனியும் உன் மௌனம் தாங்க
துளிகூட திராணியில்லை எனக்கு.
பைத்தியக்காரன்,
வழிப்போக்கன்,
நண்பன், பகைவன்
என என்னை நீ
என்ன வேண்டுமானாலும்
நினைத்துக்கொள்..
நான் உன்னையேதான்
நினைத்துக்
கொண்டிருப்பேன்!
♥ காதல் உன்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
நெருங்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
No comments:
Post a Comment