கிழிபடாத காதல்
கடிதங்கள் : 2
¤
21.6.1997 9.00 pm
பிருந்தா என்கிற தேவதைக்கு,
கடிதம் பெற்று ஒருவாரமாகியும்
பதிலேதும் இல்லாததால் இந்த இரண்டாவது கடிதம்.
அள்ள அள்ளக் குறையாத காதலை முதல் கடிதத்தில் நான் உன்னிடம் கொட்டியிருந்தும்,
நீ அதை மெல்ல மெல்ல மறைத்தபடியே வலம்
வந்துகொண்டிருக்கிறாய்!
அங்கீகாரமுமின்றி
நிராகரிப்புமின்றி நிலைகொள்ளாது
ஊசலாடித் தவிக்கும் காதல்,
எவ்வளவு வலி நிரம்பியதென ஒருவாரத்திலேயே உணர்ந்தேன்.
உன் இயல்பில் எவ்வளவு தேடியும்
ஒரு மாறுதலையும்
கண்டறிய முடியவில்லை!
எதிர்வரும் போதும் சரி, எதிர்பார்த்த போதும் சரி, அதே
அலட்டிக்கொள்ளாத
அழகுடனே கடந்து செல்கிறாய்.
எனது கடிதம் என்னவாகியிருக்கும்?
வழக்கமான காதல் கடிதங்களைப் போல படிக்கப்படாமலே,
கிழிபட்டிருக்குமா?
படித்து முடித்தபின் கிழிபட்டிருக்குமா?
இல்லை, இன்னும்
படிக்கப்படவில்லையா? என
ஏதும் தெரியாவிட்டாலும்,
ஒரு இனம் புரியாத அகர்பக்தியின் வாசம் போல்
கமகமத்துக்
கொண்டிருக்கிறது
என் மனம்..
வகுப்பறையில் அவ்வப்போது நீ வீசும் கத்திப்பார்வை மட்டும் இப்போது
கொஞ்சம் கூர் தீட்டப்பட்டிருக்கிறது..
மற்றபடி
வேறொன்றும்
நானறியேன்!
எப்படியோ என் தீராக்காதலை உன்னிடம்
கொட்டித் தீர்த்துவிட்டேன் அது போதும் எனக்கு!
இனி நீ என்ன முடிவு சொன்னாலும் நான் என் முடிவிலிருந்து
மாறப்போவதில்லை.
காதலின் குணம் காத்திருப்பதென்றால்,
காதலியின் குணம்
காத்திருக்க வைப்பது போல...
சரி,
நான் காத்திருக்கிறேன்...
காதல் உனக்குள்ளும்
பிரவேசிக்கட்டும்!!!
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...
( பரிமாற்றம் தொடரும்.....)
No comments:
Post a Comment