கிழிபடாத காதல்
கடிதங்கள் : 1
¤
12.6.1997 10pm
பிருந்தா என்கிற தேவதைக்கு,
அதிகபட்ச அழகுடன் இருக்கும் உன்னை குறைந்தபட்சம்
தேவதையென்றாவது
அழைத்தாக வேண்டும். ஏற்றுக்கொள்வாயாக!
பதினைந்துமுறை
எழுதியெழுதி
கசக்கியெறிந்து,
பதினாறாவது
முறையாய்
எழுதுகிறேன்
உனக்கான என்
உயர்எழுத்துக்களை!
எதை எழுதும்போதும் பிள்ளையார்
சுழியோடு ஆரம்பிக்கும் நான்
இந்த முதல் கடிதத்தை
இதயக் குறியோடு
தொடங்கியுள்ளேன்.
இதிலிருந்தே உனக்குத்
தெரிந்திருக்கும்..
எப்படி ஆரம்பிப்பது என்பதைக்கூட,
காதல் எனக்கு கற்றுத் தந்திருக்கிறதென்று!
இக்கடிதத்தை, நான் எப்போதோ
எழுத நினைத்திருக்கிறேன்!
ஆனால் என்னை காதல் இப்போதுதான்
தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தக் காதல் கடிதத்தால் நீ என்னைத் தேர்ந்தெடுப்பாயா?
சம்மதம் சொல்லும் உன்
கண்ணசைவிற்காக
காத்திருக்கிறேன்.
மற்ற காதலர்களைப் போல என்னால் என்
உதிரம் தொட்டெல்லாம்
கையெப்பமிட முடியாது..
ஏனென்றால் என் இரத்தம் மொத்தத்திலும்
கலந்திருக்கும்
உன்னை ஒருபோதும்
நழுவ விட நான்
தயாராயில்லை..
என் வெள்ளையணுக்களில்
கொள்ளையாய் இருப்பதும் நீயே!
என் சிவப்பணுக்களில்
உவர்ப்பாய் உலவுவதும் நீயே!
நீ என்ன சொல்வாயோ என்பதை விட
இந்தக் கடிதத்தை என்ன செய்வாயோ
என்ற பயம் கலந்த
பதற்றத்துடன்
கொடுத்தனுப்புகிறேன்....
காதல் எனது கடிதத்தைக் காக்கட்டும்!!
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...
( பரிமாற்றம் தொடரும்.....)
No comments:
Post a Comment