கிழிபடாத காதல்
கடிதங்கள் : 10
♥
8.4.1998 3.30 pm
பிருந்தா என்கிற
தேவதைக்கு,
கோவிலில் உன்னை சந்தித்த
அந்த வெள்ளிக்கிழமை
எனக்கு எப்போதும்
தங்கக் கிழமையாகவே
நினைவிலிருக்கும்!
குளிர்காற்றும் மஞ்சள் வெயிலும்
சேர்ந்து பொழிந்த மாலைப்பொழுதில்
உனக்கு முன்பாகவே நான்
வந்திருந்தேன்..
உனக்காய் காத்திருக்கும்
சுகத்திற்காக!
நீ என்னருகில் வர வர தொலைவாகிப்
போனது அந்தக்
கோவிலில் ஆசிவழங்கி வந்த
அத்தனை அம்மன்களும்!
அன்பளிப்பாய் எனக்கொரு பேனா
வாங்கி வந்திருந்தாய்..
அதில்தான் இப்போது காதல் நிரப்பி கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன்!
பிரகாரத்தை சுற்றியபடி நீ என்னென்னமோ
பேசிக்கொண்டு வந்தாய்..
என் விழிகள் உன்னை சுற்றியவாறு
எதையெதையோ
தேடிக் கொண்டிருந்து...
உன் அசைவுகளால் கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை தொலைத்துக் கொண்டிருந்த நேரத்தில்,
நேரமாச்சு.. கிளம்பலாம் என்றாய்!
அடுத்த சந்திப்பு கடற்கரையில் என்று கூறி கையசைத்து விடைபெற்றாய்..
விடைபெற்று நீ மறைந்தபின்னும்
என்னுடனேயே
உலாவிக் கொண்டிருந்தது..
உனது அசைவுகளில் என்
விழிகள் தேடிக்
கொண்டிருந்த
எழுதப்படாத கவிதைகள்!
கோவில் சந்திப்பில்
சிலையான நான்,
கடற்கரை சந்திப்பில்
அலையாகக் காத்திருக்கிறேன்..
மீண்டும் சந்திக்கலாம் வா..!
♥ காதல் நம்மை இன்னும் வெகுதூரம்
கூட்டிச் செல்லட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
No comments:
Post a Comment