பச்சைக்கலர் புடவை
எடுப்பாயிருக்குமா
நீலக்கலர் புடவை
எடுப்பாயிருக்குமா
என்ற நீண்ட யோசனைக்குப்
பிறகு
என்னை இன்னும்
கொஞ்சம் சிவப்பாய்க்
காட்டக்கூடிய
நீலக்கலர்
புடவையை
தேர்ந்தெடுத்தேன்!
ரோஜாவா மல்லிகையா
என்று ஒருநாள்
முன்கூட்டியே
தோழிகளோடு
கூடிப்பேசி
மணக்கும்
மல்லிகையை
சூடிக்கொண்டேன்!
மாப்பிள்ளை வந்தாச்சு
மாப்பிள்ளை வந்தாச்சு என்ற
தந்தையின்
கிசுகிசுப்புக் குரலில்
பரபரப்பானது வீடு!
படபடப்பானது
மனது!
முதுகுத்தண்டு
வியர்வையால்
பிசுபிசுக்க
முகமெல்லாம்
வெட்கம் அள்ளிப் பூசிக்கொள்ள
கால் கட்டை விரலைப்
பார்த்தபடி
கையில் காபி டம்ளருடன்
வலம்வந்த பிறகு
முன் அறைக்குள்
சென்று கதவிடுக்கில்
கண்புதைத்து
பதிலேதும் சொல்லாமல்
கைகூப்பி விடைபெறும்
அந்த
பதினைந்தாவது
மாப்பிள்ளையை
ஏக்கத்தோடு
பார்த்தபடியே
நிற்கிறேன்
அழகால்
அங்கீகரிக்கப்
படாத
அழுக்குத் தேவதையாய்!
¤
No comments:
Post a Comment