Monday 9 July 2012

மழையெழுத்து::

¤
புதையுண்ட
விதையின்
தலையெழுத்தை
மாற்றுகிறது
மழையெழுத்து!
¤
ஒவ்வொரு முறையும்
அழுதுகொண்டே
விழுகிறது மழை..
ஒதுங்க இடமின்றி
தத்தளிக்கும்
பிளாட்பாரவாசிகளைக்
கடக்கையில்!
¤
நனையாமலிருக்க
நீ பிடித்தோடும்
துப்பட்டாக்குடையை
வானவில் என
நினைத்த வானம்
நிறுத்திக் கொள்கிறது தனது
பெருமழையை!
¤
நேரத்தோடு
உறங்கிப்போகும்
குழந்தைக்காக
மரங்கள்
சேமித்து வைத்திருக்கிறது
நடுநிசிமழையை!
¤
அழுத்தாமல் எழுதிக்
கொண்டிருக்கும்
மழையெழுத்தோடு
தன் விரலெழுத்தையும்
சேர்த்தெழுதுகிறது
குழந்தை..
கண்ணாடி
ஏற்றிவிட்ட
காரில்
பயணித்தபடி!
¤

No comments:

Post a Comment