Saturday 21 July 2012

மழையழகி::

¤
மழைக்கு ஒதுங்க
நீ என்
தோட்டத்துப் பக்கம்
வந்து போயிருந்ததை
சொல்லியது
உன் கால் தடத்திற்கு
குடைபிடித்துக்
கொண்டிருந்த
காளான் கூட்டங்கள்!
¤
ஒரு மழைநாளில்
நிழற்குடையினுள்
என்னருகே
கொஞ்சநேரம்
நின்றிருந்து
மழை நின்றதும்
நீ சென்றுவிட்டாய்..
அன்றிலிருந்து
எனக்குள்
பெய்து கொண்டிருக்கிறது
இடியுடன் கூடிய
மழை!
¤
எனக்கு மழை
பிடிக்கிறதோ
இல்லையோ
முழுதாய் நனைந்து
கொள்கிறேன்..
ஈரத்தோடு வரும்
என்னை நீ
இழுத்தணைத்து
தலை துவட்டுவாயென!
¤
எதிர்பாரா
மழைநேரங்களில்
எதிர்பார்த்தே
காத்திருக்கிறேன்
தேநீரோடு
நீ தரும்
இளஞ்சூட்டு முத்தங்களை!
¤
நல்லவேளை
மழையில்
நனைந்துவிட்டாய்..
இல்லையென்றால்
இன்னும் சில மணி
நேரங்களுக்கு மழை
நீடித்திருக்கும்!
¤

No comments:

Post a Comment