என்றோ ஒரு
மழைநாளில் தான்
வீடெங்கும்
ஈசல்கூட்டங்கள்
விளையாடி மடிகிறது
என்றோ ஒரு
மழைநாளில் தான்
தேநீரின் சுவை
இரட்டிப்பாகிறது
என்றோ ஒரு
மழைநாளில் தான்
புதையுண்ட விதை
முளைக்கிறது
என்றோ ஒரு
மழைநாளில் தான்
வளர்ந்த மரம்
வேரோடு
சாய்க்கப்படுகிறது
என்றோ ஒரு
மழைநாளில் தான்
கலைந்த காதல்,
கவிதையாக்கப்
படுகிறது
என்றோ ஒரு
மழைநாளில் தான்
வண்ணத்துப்
பூச்சியின்
வண்ணம் கரையுமா
என்ற சந்தேகம் எழுகிறது
என்றோ ஒரு
மழைநாளில் தான்
விடாமழை
சபிக்கப்படுகிறது
என்றோ ஒரு
மழைநாளில் தான்
மழையோடு நனைந்து
தன்னைக்
கரைக்கும்
ரசனை
நிகழ்கிறது
¤
No comments:
Post a Comment