Tuesday 26 June 2012

மழைக்காலம்::

¤
வானம்
பொத்துக்கொண்டு
பொழிகிறது..
பங்களாவில்
வசிப்பவனுக்கு
மழையாகவும்
குடிசைக்குள்
கிடப்பவனுக்கு
பிழையாகவும்!
¤
சாலையில்
நடந்துபோகையில்
சாரல் மழை!
குடை எடுத்து
வந்திருக்கலாமோ
என்ற சலிப்பில்
நான் வேகமாய் நடக்க,
நல்லவேளை
குடையெடுத்து
வரவில்லை என்ற சந்தோசத்தில்
மெதுவாய்
பின்தொடர்கிறான்
மகன்!
¤
நேற்றொரு
கனாக்கண்டேன்
நடுக்கடலில்
கப்பலில் நின்றபடி
மழையை ரசிப்பதாய்!
துயில் கலைந்து
விழித்துப் பார்த்தேன்..
கூரைக் கூடாரத்தினுள்
ஒழுகும் மழையில்
ஓடும் காகிதக்
கப்பலை ரசித்துக்
கொண்டிருக்கிறான்
மகன்!
¤
மழை வரப்போகும் நேரத்தில்
அம்மாவிற்கு
உதவி செய்கிறேன்
என்ற சாக்கில்
காய்ந்து கொண்டிருக்கும்
மிளகாய் வத்தல்களை மெதுவாய் அள்ளுகிறது குழந்தை!
அதிவேகமாய்
தரையிறங்கிக்
கொண்டிருக்கிறது
மழை!
¤

No comments:

Post a Comment