இலையுதிர் காலமொன்றில்
போதி மரத்திலிருந்து மோட்சம் பெறுகிறது பழுப்புநிற இலையொன்று!
உதிரும் அந்த இலை இன்னும் காற்றால் அழைத்துச் செல்லப்படாமல்
தியானித்திருக்கும்
உதிர்ந்த இலைகளின் மேல் வீழ்கிறது!
சிலநிமிட ஸ்பரிசத்திற்கு பின்
பலமான காற்றால்
இழுத்துச் செல்லப்படும் அந்த போதி இலை,
போன்சாய் மரச்செடியின் அழகையும்
அரசமரத்தின் கம்பீரத்தையும்
தரிசித்தவாறே
சருகாய் மாறி சரசரத்து காற்றுக்கு சங்கீதம் கற்றுத்தரவோ,
கடைசிவரை கிழிபடாமலிருந்து
ஆற்றைக்கடக்க
நினைக்கும் கட்டெறும்புக்கு
கட்டுமரமாகவோ,
வறட்சிகாணும் முன்பாக மான்குட்டிக்கு உணவாகவோ
மாற தன்னைத் தயார்படுத்திக் கொண்டு
நகர்ந்து கொண்டிருக்கிறது
முடிவுறா பாதையை நோக்கி!!
No comments:
Post a Comment